2016 ரமளான் – நிலமெல்லாம் இரத்தம் – அறிமுகம்

[உமரின் மொபைல் அலறுகிறது. அவன் தம்பி அப்ரகாம் சௌதி அரேபியாவிலிருந்து போன் செய்துக்கொண்டு இருக்கிறான். அப்ரகாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமை தழுவினான். ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் இஸ்லாம்-கிறிஸ்தவம் பற்றி இவ்விருவர் பேசிக்கொள்வார்கள், கடித பரிமாற்றம் செய்துக் கொள்வார்கள். இந்த ஆண்டு (2016), இவ்விருவரின் உரையாடல் என்னவென்பதை படியுங்கள். உமர் போன் எடுத்து பேசுகிறான்]

உமர்: ஹலோ! அப்ரகாம்

அப்ரகாம்: ஹலோ, உமரண்ணா. அஸ்ஸலாமு அலைக்கும். 

உமர்: வ அலைக்கும் ஸலாம். எப்படி இருக்கிறாய்?

அப்ரகாம்: அல்ஹம்துலில்லாஹ்! நான் நன்றாக இருக்கிறேன். நீங்க மற்றும் வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால் எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள். நாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தானே பேசுவது வழக்கம், இன்று என்ன திடீரென்று போன் செய்தாய்?

அப்ரகாம்: இன்னும் சில நாட்களில் ரம்ஜான் ஆரம்பிக்கப்போகிறது. நீங்க விசேஷமாக ரம்ஜான் மாதத்தில் நேரத்தை ஒதுக்கி என்னோடு பேசுவீங்க, மெயில் எழுதுவீங்க இல்லையா! இந்த வருஷம் என்ன பிளான் வெச்சிருக்கீங்க என்று கேட்கலாம் என்று போன் செய்தேன்.

உமர்: ஓ.. ரம்ஜானா! நான் மறந்தே போயிட்டேன். இந்த வருஷத்துக்காக இதுவரை  நான் எந்த ஒரு பிளானும் போடவில்லை. உன்னிடம் ஏதாவது பிளான் இருந்தா சொல்லு.

அப்ரகாம்: என்கிட்டே ஒரு பிளான் இருக்கு. உங்களுக்கு ஒரு புத்தகத்தை PDF ஃபைலாக அனுப்புகிறேன். அதை படிங்க. 

உமர்: நம் தமிழ் முஸ்லிம்கள் எழுதிய புத்தகமாக இருந்தால், அதை நான் ஏற்கனவே படிச்சிருப்பேன் என்று நினைக்கிறேன். 

அப்ரகாம்: புத்தகத்தின் பெயர் “நிலமெல்லாம் இரத்தம்”, அதை எழுதியவர், எழுத்தாளர் பா ராகவன் ஆவார். இதற்கு முன்பாக இதை படிச்சிருக்கீங்களா?

உமர்: ஓ.. நிலமெல்லாம் இரத்தமா! சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தளத்தில் அதன் சில அத்தியாயங்களை படிச்சிருக்கேன். பா ராகவன் அவர்களின் எழுத்துக்களை நான் விரும்பி படிப்பதுண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவரது தளத்திற்குச் சென்று கட்டுரைகளை படிப்பேன். 

அப்ரகாம்: நல்லதா போச்சு, உங்களுக்கு ஏற்கனவே பாராவைப் பற்றித் தெரிந்திருக்கிறது! ஒரு முஸ்லிமல்லாதவர் என்ற முறையில் இவர் இப்புத்தகத்தை  நடுநிலையோடு எழுதியுள்ளார். பாலஸ்தீன், இஸ்ரேல் பற்றிய விவரங்களை தெளிவாகவும், சுவாரசியமாகவும் எழுதியுள்ளார். நீங்க இந்த புத்தகத்தை முழுவதுமாக கட்டாயம் படிச்சு உங்க கருத்தைச் சொல்லனும், இது தான் இந்த ஆண்டின் ஹோம் வர்க் உங்களுக்கு.

உமர்: எனக்கு பெரிய வேலையை கொடுத்திட்டியே! ஒரு இந்து எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை முஸ்லிம்கள் புகழ்ந்தால், கண்டிப்பாக அதில் அனேக தில்லுமுல்லு நடந்திருக்கும். 

அப்ரகாம்: நீங்க நினைக்கிறபடி ஒன்றுமில்லை. பாரா நடுநிலையோடு, வீணான மிகைப்படுத்துதல் இல்லாமல் எழுதியுள்ளார். இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது பற்றியும், அங்கு நடந்துக்கொண்டு இருக்கும் சண்டைகள் பற்றியும் நீங்க என்ன நினைக்கிறீங்க?

உமர்: சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் படித்த ஒரு சில அத்தியாயங்களிலேயே சில மிகைப்படுத்தல்களைக் கண்டேன். ஆங்காங்கே சில உண்மைகளை மறைத்து, முஸ்லிம்களுக்கு சாதகமாக அவர் எழுதியிருப்பதாக தெரிகிறது.  எனக்கு நேரமின்மையின் காரணமாக அவருக்கு பதில் எழுதவில்லை.  இஸ்ரேல் பாலஸ்தீன் செய்திகளை அவ்வளவாக விரும்பி படிப்பதில்லை. எனவே. . .

அப்ரகாம்: அதை இதைச் சொல்லி நழுவ வேண்டாம். கட்டாயம் இந்த புத்தகத்தை படிக்கிறீங்க, உங்க கருத்தைச் சொல்றீங்க.

உமர்: ம்ம்ம்…. படிக்கிறேன். ஆனால், எனக்கு தெரிஞ்ச விஷயங்களைப் பற்றி மட்டுமே நான் எழுதுவேன். அதாவது இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றி அவர் உண்மைக்கு புறம்பாக எழுதியிருந்தால், அதைப் பற்றி நான் என் கருத்தைச் சொல்வேன். பாலஸ்தீனா-இஸ்ரேல் சண்டைப் பற்றி அவர் எழுதியதை சரி பார்க்க நான் சரித்திர விவரங்களை அதிகம் படிக்கவேண்டி இருக்கும். இப்போதைக்கு எனக்கு அதற்கு நேரமில்லை. இதைப் பற்றி நான் என் விமர்சனத்தை வைக்கமுடியாது. 

அப்ரகாம்: பரவாயில்லை, உங்க விருப்பத்தின்படியே செய்யுங்க. உங்களால் அவரது புத்தகத்தில் பிழைகளை கண்டுபிடிக்கமுடியாது. நீங்க தவறாக விமர்சித்தால், நான் உங்களை சும்மா விடமாட்டேன்.

உமர்: எனக்கு சம்மதம் தான். பேசிக்கிட்டே இருக்கும் போதே, நிலமெல்லம் இரத்தம் PDFஐ அனுப்பிட்டியே! நான் முதலாவது இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கிறேன். அதன் பிறகு உனக்கு மெயில் அனுப்புகிறேன்.

அப்ரகாம்: ரொம்ப சந்தோஷம், இந்த ரம்ஜானோடு உங்க கதை முடியப்போகிறது, அதாவது, இஸ்லாம் பற்றிய உங்களுடைய தவறான கண்ணோட்டம் மாறப்போகிறது. அதுவும் முஸ்லிமல்லாத ஒருவர் எழுதிய புத்தகம் உங்களை சிந்திக்கவைக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

உமர்: தம்பி, நீ அகங்கையிற் போட்டு புறங்கையை நக்க பார்க்கிறாய்! இதனால் உனக்கு ஒரு உபயோகமும் உண்டாகப்போவதில்லை. அல்லாஹ்வின் புத்தகமே என்னை மாற்றமுடியாத போது, மனுஷன் எழுதியது என்னச் செய்யும்? சும்மா இருந்த எழுத்தாளர் ‘பா ராகவன்’ அவர்களை வம்புக்கு இழுத்து இருக்கிறாய்! அவர் ஒளிவு மறைவு இன்றி எழுதியிருந்தால், நல்லது. அதை விட்டுவிட்டு, முஸ்லிம்களுக்கு சாதகமாகவும், இஸ்லாம் பற்றிய உண்மைகளை மறைத்தும் அவர் எழுதியிருந்தால், அதற்கான கூலியை அவர் வட்டியோடு கட்டவேண்டி வரும். 

அப்ரகாம்: முதலில் அதை படியுங்க, பிறகு பேசலாம். குட்நைட்.

உமர்: குட்நைட்

அடிக்குறிப்புக்கள்:

  1. நிலமெல்லம் இரத்தம் – PDF டவுன்லோட் செய்ய சொடுக்கவும்.
  2. நிலமெல்லம் இரத்தம் – பிளாக்கர் தளம்
  3. எழுத்தாளர் பா. ராகவன் அவர்களின் தளம்.

2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்