நச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?

முன்னுரை: நச்சென்று நாலு கேள்விகளின் பின்னணி என்ன?

உமரின் சகோதரர் சௌதி அரேபியாவில் வேலை செய்கிறார், அவர் கடந்த வருடம் இஸ்லாமை தழுவினார். கடந்த வருடம் ரமளான் மாதத்தில் உமர் தன் சகோதரனோடு புரிந்த 30 கடித உரையாடல்களை இங்கு படிக்கலாம். உமரின் சகோதரன் சௌதி அரேபியாவிலிருந்து ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தாய் நாட்டிற்கு திரும்பினார். உமரின் தம்பி, எப்படியாவது தன் குடும்பம் இஸ்லாமை தழுவவேண்டும், இந்த ஒரு மாத காலம், இஸ்லாம் பற்றி தன் குடும்பத்திற்கு அறிவிக்க தனக்கு அல்லாஹ் கொடுத்த ஒரு அருமையான வாய்ப்பு என்று எண்ணி மகிழ்கிறார்.இதே போல, உமரும் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார். உமரின் தம்பி ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. குடும்பத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உமரும் அவரது தம்பியும் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள், இதோ அந்த வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிடைத்துள்ளது. உமரும் அவரது தம்பியும் உரையாடும் அனேக உரையாடல்களை கேள்வி பதில் தொடர்களாக காண்போம். உமரின் தம்பியின் பெயர் அப்துல்லாஹ் என்று மாற்றப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ்: அண்ணே, கடந்த இரண்டு நாளா உங்களோடு பேசலாம் என்று நினைத்து காத்திருக்கிறேன்.இன்று நீங்க கொஞ்சம் ஃபிரீயா இருக்கீங்க என்று நினைக்கிறேன்.

உமர்: தம்பி,நீ சொல்லிட்டே நான் சொல்லலே அது தான் வித்தியாசம். சரி, நாம் பேசலாம்.

அப்துல்லாஹ்: அண்ணே நாம் பேசப்போவது கொஞ்சம் அதிகபடியாக இருக்கலாம், இருந்தாலும், நீங்க கோபித்துக் கொள்ளக் கூடாது.

உமர்: இல்லை, நான் கோபம் கொள்ளமாட்டேன். நாம் இருவரும் அண்ணன் தம்பி, நம்மிடையே என்ன விரிசல் உண்டாகப்போகிறது சொல்? நானும் ஏதாவது தர்மசங்கடமான கேள்வி கேட்டுவிட்டால், நீயும் சாந்தமாக இருக்கவேண்டும்,என் மீது கோபம் கொள்ளக்கூடாது.

அப்துல்லாஹ்: அண்ணே, முதலாவது நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், 'உங்களுக்கு சத்தியம் எது என்று தெரிந்திருந்தும், இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என தெரிந்திருந்தும், ஏதோ ஒரு காரணத்திற்காக, நீங்கள் இன்னும் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

உமர்: இந்த சந்தேகம் உனக்கு எப்படி வந்தது? ஏன் இப்படி கேட்கிறாய்?

அப்துல்லாஹ்: நீங்க, அனேக இஸ்லாமிய நூல்களை படித்து இருக்கிறீங்க, குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படித்து இருக்கீங்கள். கடந்த வருடம் மெயில் மூலமாக நாம் இருவரும் பேசிய உரையாடல்கள் மூலமாக நான் இதனை அறிந்துக்கொண்டேன். எனவே,வேண்டுமென்றே நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதற்கு உங்கள் பதில் என்ன?

உமர்: தம்பி,வெறும் இஸ்லாமிய நூல்களை படித்துவிட்டால், ஒருவன் நிச்சயமாக இஸ்லாமியனாக மாறிவிடுகிறான் என்பது ஒரு பலவீனமான நம்பிக்கையாகும். அனேகர் இஸ்லாமை அதிகமாக அறிந்ததினாலேயே இஸ்லாமை விட்டு வெளியேறி இருக்கிறார்கள், அனேகர் இஸ்லாமை முழுவதுமாக புரிந்துக்கொண்டதினால் நாத்தீகர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் அனேகர் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொண்டும், உயிருக்கு பயந்து, கேள்வி கேட்காமல், இஸ்லாமை விட்டு வெளியேறாமல் ஒரு போலியான வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, ஒருவன் குர்-ஆனையும், ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய நூல்களை படித்து, புரிந்துக்கொண்டால், அவன் இஸ்லாமுக்கு மாறிவிடமுடியாது.

அப்துல்லாஹ்: நீங்க சொல்வதை ஒரு வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், உங்களை பொறுத்தமட்டில், நீங்கள் ஏதோ ஒரு உள்காரணத்திற்காக அல்லது உள் நோக்கத்திற்காக உண்மையை ஏற்க மறுப்பதாக நான் உணருகிறேன்.

உமர்: அப்படியா? அது என்ன உள்காரணம் / உள்நோக்கம்? எவைகளை அடிப்படையாக வைத்து இப்படி சொல்லுகிறாய்?

அப்துல்லாஹ்: நான் உள்நோக்கம் என்றுச் சொல்வது, இதைத் தான். அதாவது இப்போது உங்களுக்கு சர்ச்சில் நல்ல பெயர் இருக்கிறது, மதிப்பு மரியாதை இருக்கிறது. நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இந்த பெயர் புகழ் எல்லாம் அழிந்துவிடுமே என்று நினைத்து, நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். மேலும், நான் இப்போது சொல்வதை கேட்டு நீங்கள் கோபம் கொள்ளக்கூடாது,அதாவது சர்ச்சில் ஒரு சில ஊழியங்கள் செய்யும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதோ என்னவோ, இந்த பணத்தையும் விட்டுவிட மனமில்லாதபடியினால், நீங்கள் அதிகமாக இஸ்லாமை அறிந்திருந்தாலும், அதனை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். என்னடா இவன், நச்சென்று கேள்விகளை கேட்கிறானே என்று நீங்கள் கோபம் கொள்ளவேண்டாம்.

உமர்: ஓ, இது தான் உன் சந்தேகமா? பணமும், பெயர் புகழும் இஸ்லாமை ஏற்க எனக்கு தடைக்கற்களாக இருக்கிறது என்று நீ நினைக்கிறாய். முதலாவதாக, நீ நினைப்பது போல, நான் செய்யும் ஒரு சில சின்ன ஊழியத்திற்காக யாரிடமிருந்தும் பணத்தை பெறவில்லை. நீ இங்கு இருக்கும் போது நாம் இருவரும் சேர்ந்து தான் கடந்த பல ஆண்டுகளாக சபைக்கு உதவியாக இருந்திருக்கிறோம். அந்த காலகட்டத்தில் நாம் ஏதாவது பண உதவியை சபையிடமிருந்து பெற்றோமா? நீ பதில் சொல்லு?

அப்துல்லாஹ்: இல்லை, நாம் பண உதவி எதையும் பெறவில்லை, மட்டுமல்ல, நாம் பணத்தை எதிர்ப்பார்த்து ஊழியமும் செய்யவில்லை.

உமர்: விஷயம் இப்படி இருக்க, இப்போது மட்டும் ஏன் உனக்கு இந்த விதமான பணம் சம்மந்தப்பட்ட சந்தேகம் வந்துள்ளது? உன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் கேட்ட கேள்விகளை, உன் உள்ளத்தில் போட்ட சந்தேகங்களை, அப்படியே என்னிடம் கேட்கிறாயா என்ன? உன் அண்ணனுடைய குணத்தை நீ அறியமாட்டாயா? மேலும், உனக்கு ஏற்கனவே தெரியும், நம் குடும்பத்தில் நாம் சம்பாதிக்கும் செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அப்படியே சபைக்கு தருகிறோம், மேலும் இந்த பண விஷயத்தில் நம் அப்பா எவ்வளவு கண்டிப்பாக உன்னையும், என்னையும் வளர்த்துள்ளார் என்பதை அறியமாட்டாயா?

அப்துல்லாஹ்: நான் கேட்டதற்கு காரணம், அனேகர் இப்படி செய்வதினால் தான்.

உமர்: ஒன்றும் பிரச்சனை இல்லை தம்பி, குறைந்தபட்சம் உன் சந்தேகத்தை தயங்காமல் என்னிடம் கேட்டாயே இதுவே எனக்கு அதிக மகிழ்ச்சி. மேலும் பெயர் புகழ் என்றெல்லாம் பேசினாய். தம்பி, பெயரும் புகழும் நித்திய ஜீவனை விட பெரியதா என்ன? நிச்சயமாக இல்லை. நமக்கு நித்திய ஜீவன் தான் முக்கியம், எது சத்தியமோ அதனை நாம் பின்பற்றவேண்டும். நாம் இந்த உலகில் வாழும் போது எடுக்கும் முடிவுகள், நம் நித்தியத்தை பாதிக்கும் என்பதால் தான் நீயும் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய், நானும் பேசிக்கொண்டு இருக்கிறேன். எனவே, பெயரும் புகழும் இன்று இருக்கும், நாளைக்கு சென்றுவிடும், நாம் நம்முடைய நித்திய ஜீவனை இழக்கும் எவைகளையும் விட்டுவிடவேண்டும். என்னைப் பொறுத்தமட்டில், நமக்கு நித்திய ஜீவனை இயேசு தருகிறார், முஹம்மது அல்ல என்பதாகும்.

அப்துல்லாஹ்: நீங்கள் இஸ்லாமை ஏற்று அல்லாஹ்வோடு சொர்க்கத்திற்கு வரவேண்டும் என்பது தான் என் ஆவள், அதற்காகத் தான் நானும் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.

உமர்: தம்பி உன் கேள்வி, எதனால் வெளியானது என்பதை என்னால் உணரமுடிகிறது. இதுவரை நீ படித்த இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உனக்கு இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்-ஆன் மற்றும் அல்லாஹ் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதனால், இந்த விஷயங்களை அறிந்த என் அண்ணன் மட்டும் ஏன் இவ்வளவு நல்ல மார்க்கத்தை ஏற்க மறுக்கிறார் என்று நீ ஆச்சரியப்படுகிறாய். அதனால் தான் இந்த கேள்விகளை நீ கேட்கிறாய்.

அப்துல்லாஹ்: அண்ணன் என்றால் இப்படித்தான் இருக்கனும், நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்களே!

உமர்: டேய், நான் உன் அண்ணனாக்கும். சரி, விஷயத்திற்கு வருகிறேன், நல்லா கவனி. நீ இஸ்லாம் பற்றிய ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்துள்ளாய். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இஸ்லாமுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்தை மட்டும் அறிந்துக்கொண்டு, உலகம் ஏன் இப்படி இஸ்லாமை கறைச்சு குடிக்கிறது, அதனை ஏற்க மறுக்கிறது என்று வேதனை அடைந்தால் எந்த பயனும் இல்லை. இரண்டு பக்கங்களையும் நீ அறியவேண்டும்.

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை.. நீங்க சொல்வது போல நான் இஸ்லாமில் அறைகுறை அல்ல! எனக்கு இஸ்லாம் முழுவதுமாக தெரியும்!

உமர்: அடப்போடா பைத்தியக்காரா! 50 ஆண்டுகளாக இஸ்லாமியர்களாக இருந்தவர்களுக்கே இன்னும் இஸ்லாம் பற்றி முழுவதுமாக தெரியாது. 20 ஆண்டுகளாக மௌலவிகளாக, இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களுக்கே இன்னும் எந்த ஹதீஸ்கள் உண்மை எந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை. நேத்து பெய்ந்த மழையில் முளைத்த காளான் நீ, ஓரிரு ஆண்டுகள் சௌதி அரேபியாவில் வாழ்ந்துவிட்டால் நீ இஸ்லாமை முழுவதுமாக அறிந்துவிடமுடியுமா? 1400 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் ஒரு சரியான முடிவிற்கு வராமல் இஸ்லாமிய அறிஞர்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு டஜன் இஸ்லாமிய புத்தகங்களை படித்த உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா?

அப்துல்லாஹ்: அண்ணே, அத விடுங்க! என் கேள்விக்கு என்ன பதில்? 

உமர்: சரி, இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். மறுபடியும் நல்லா கவனி. நான் மூன்று விஷயங்களை உன் முன் வைக்கிறேன்:

1) நபர்கள் – இயேசுக் கிறிஸ்து மற்றும் முஹம்மது

2) கோட்பாடுகள் – பைபிள் மற்றும் குர்-ஆன்

3) மூலங்கள்: யெகோவா தேவன் மற்றும் அல்லாஹ்

தம்பி, நான் முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்தேன், ஹதீஸ்கள் மற்றும் குர்-ஆனில் காணப்படும் முஹம்மதுவின் வாழ்க்கை குறிப்புக்களையும் ஆராய்ந்தேன். ஆனால், இயேசுக் கிறிஸ்துவின் சொல்லும் செயலும் என்னை கவர்ந்ததை போல, முஹம்மதுவின் சுன்னா (முஹம்மதுவின் சொல்லும் செயலும்) என்னை கவரவில்லை. உண்மையைச் சொல்கிறேன், குறைந்த பட்சம் முஹம்மது ஒரு நல்ல ஆன்மீகதலைவர் என்ற நிலையிலும் அவரை நான் ஏற்கமுடியாது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு ஒரு எதிர்மறையான தாக்கத்தை என்னில் உண்டாக்கியுள்ளது. என்னில் மட்டுமல்ல முஹம்மதுவின் உண்மை வாழ்க்கையை படிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் இந்த எதிர்மறை தாக்கம் தான் உண்டாக்கும். முஹம்மதுவின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்கும் உன்னைப்போல இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இப்படி எதிர்மறை தாக்கம் வர வாய்ப்பு இல்லை. 

இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்திருந்தும் ஏன் இஸ்லாமை மக்கள் ஏற்பதில்லை என்று கேள்வி கேட்கிறாயே, இதற்கு இது முதலாவது காரணமாகும்.

அப்துல்லாஹ்: அப்படியானால், முஹம்மது எந்த ஒரு நற்செயலையும் செய்யவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

உமர்: அவர் முழுவதுமாக ஒரு தீய பிம்பம் என்று நான் சொல்லவரவில்லை, மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆன்மீக தலைவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் அவரில் காணப்படவில்லை என்றே சொல்கிறேன். இதைப்பற்றி வேண்டுமானால், நாம் அடுத்த முறை எப்போதாவது பேசலாம், இப்போது உன் கேள்விக்கான இரண்டாவது பாயிண்டை நான் சொல்கிறேன்.

இரண்டாவதாக,பைபிள் என்னில் உருவாக்கிய ஒரு நல்ல மாற்றத்தைப் போல, குர்-ஆன் என்னில் மாற்றத்தை உண்டாக்கவில்லை என்பதை நான் அறிந்தேன். அதாவது இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நீதி, நியாயத்தீர்ப்பு போன்ற பைபிளின் கோட்பாடுகள் எனக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் உண்டாக்குகிறது. ஆனால்,குர்-ஆனின் கோட்பாடுகள் என்னில் அவ்வளவாக மாறுதல்களை உண்டாக்கவில்லை. என்னில் மட்டுமல்ல எந்த மனிதனின் வாழ்விலும், குர்-ஆன் ஒரு நம்பிக்கையை உண்டாக்க முடியாது என்பது என் கருத்தாகும்.

உன்னிடம் ஒரு கேள்வி: நீ அல்லாஹ்வையும் குர்-ஆனையும் நம்புகிறாயா?

அப்துல்லாஹ்: ஆம், நிச்சயமாக அல்லாஹ்வை நம்புகிறேன், குர்-ஆனையும் நம்புகிறேன்.

உமர்: இன்று நீ மரித்தால், உனக்கு அல்லாஹ் சொர்க்கம் தருவாரா? இதன் நிச்சயம் உனக்கு உண்டா?

அப்துல்லாஹ்: அல்லாஹ் சொர்க்கம் தருவார் என்று நிச்சயமாக நான் சொல்லமுடியாது, அதை நான் இப்போது முடிவும் செய்யக்கூடாது. ஆனால், அவரிடமிருந்து நல்லதை எதிர்ப்பார்க்கலாம்.

உமர்: நிச்சயம் இல்லாமல் 'அல்லாஹ் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம், ஆனால் நான் மட்டும் மார்க்கத்தை முழுவதுமாக கடைபிடிக்க முயற்சி எடுப்பேன்" என்றுச் சொல்லி நீ இவ்வுலகில் வாழவேண்டும். ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு உன்னைப்போல சந்தேகம் இல்லை, இன்று மரித்தாலும் அவன் கிறிஸ்துவுடன் வாழும் அந்த நித்திய ஜீவன் அவனுக்கு உண்டு என்ற முழு நிச்சயம் இவ்வுலகில் வாழும் போதே அவனுக்கு பைபிள் கொடுத்துவிடுகிறது. எனவே தான் நான் சொல்கிறேன், குர்-ஆனை முழுவதுமாக அறியும் எந்த ஒரு மனிதனுக்கும், நித்திய ஜீவனின் ஒரு நிச்சயம் இல்லை, ஆதனால் தான், நான் குர்-ஆன் ஒரு இறைவேதம் என ஏற்க மறுக்கிறேன்.

மூன்றாவதாக, யெகோவா தேவன் என்னோடு ஒரு தந்தையைப் போல நல்லுறவு கொண்டுள்ளார். ஆனால், அல்லாஹ்வோ,என்னோடு ஒரு அடிமை எஜமானன் என்ற நிலையில் இருக்க அழைக்கிறார். யாராவது அப்பாவை விட்டுவிட்டு,ஒரு மகா ராஜாவிற்கு மகனாக மகளாக இருப்பதை விட்டுவிட்டு, ஒரு அடிமையைப்போல வாழ தன்னை ஒரு எஜமானனுக்கு விற்றுவிடுவானா? உன் அண்ணன் அவ்வளவு பெரிய அடிமுட்டாள் என்று நீ நினைத்தாயா தம்பி?

கிறிஸ்தவம் என்பது அப்பாவிற்கும் அவன் மகனுக்கும் இடையே இருக்கும் ஒரு உறவுமுறையாகும். இஸ்லாம் என்பது ஒரு எஜமானனுக்கும் அடிமைக்கும் இடையே இருக்கும் ஒரு அக்ரிமெண்டு அதாவது ஒரு நபந்தனைப் பத்திரம் ஆகும்.

எனவே அனேக காரணங்களில் இந்த மூன்று முக்கிய காரணங்கள் தான் என்னை இன்னும் இஸ்லாம் பக்கம் இழுக்காமல் வைத்திருக்கிறது.

இப்போது உன் சந்தேகம் தீர்ந்ததா?

அப்துல்லாஹ்: அப்படியானால் நான் ஒரு அடிமை என்றுச் சொல்கிறீங்களா?

உமர்: அடிமையில்லாமல் நீ என்ன அல்லாஹ்வின் குமாரனா? இஸ்லாம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாமலா நீ இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய்? அல்லாஹ் உன்னை எந்த நாளிலும் ஒரு குமாரனாக ஏற்றுக்கொள்ளமாட்டார். குறைந்த பட்சம் ஒரு மகனாக கூட உன்னை தத்து எடுத்துக்கொள்ளமாட்டார்.

அப்துல்லாஹ்: உங்களை நாளைக்கு பார்த்துக்கொள்கிறேன். இன்னிக்கு உங்களை இப்போதைக்கு போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

அம்மா… எனக்கும் அண்ணாவிற்கு காபி கொண்டு வாங்க.

உமர்: (உமர் மனதுக்குள் நினைக்கிறார்: அடப்பாவமே, என் தம்பி ஒரு முஸ்லீமைப் போலவே நடந்துக்கொள்கிறானே! அவனால் பேசமுடியவில்லையானால், உடனே பிளேட்டை மாத்துரான்… இந்த விஷயத்தில் என் தம்பி கெட்டிக்காரன்…. )

அடுத்த "நச்சென்று நாலு கேள்வி" தொடரில் சந்திப்போம்.

மூலம்: http://isakoran.blogspot.in/2013/03/1.html

உமரின் இதர கட்டுரைகள்