பாகம் 4 – பைபிள் பற்றிய‌ ஆய்விற்காக செண்பகப்பெருமாள் பயன்படுத்திய நூல்கள் எவை?

(செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்)

(“யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்“ என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்)

செண்பகப்பெருமாள் அவர்கள் தம்முடைய புத்தகத்தின் முகவுரையில் எழுதிய முதல் பத்திக்கு முந்தைய கட்டுரையில் மறுப்பைக்கண்டோம். இந்த கட்டுரையில், அவர் தம்முடைய புத்தகத்திற்காக ஆய்வு செய்த நூல்களைப் பற்றிய‌ ஒரு சிறு குறிப்பைக் காண்போம்.

ஆய்வுகளுக்காக பயன்படும் நூல்கள்:

ஒருவர் ஒரு புதினத்தையோ(Novel) அல்லது  கற்பனைக் கதையையோ எழுதவிரும்பினால் அதற்காக அவருக்கு ஆராய்ச்சி நூல்கள் பெரும்பான்மையாக‌ தேவைப்படாது. வாசகர்களின் ருசிக்கு ஏற்றாற்போல் சுவாரசியமாக கதையை கொண்டுச் சென்றால் போதுமானது. ஆனால், ஒரு ஆய்வுப்புத்தகம் என்றுச் சொல்லி, ஒரு மார்க்கத்தின் வேதத்தை விமர்சிக்க விரும்பும் எந்த ஒரு அறிஞரும், தன்னுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் வண்ணம் பல நூல்களை படித்து, அவைகளை புரிந்துக்கொண்டு, அவைகளிலிருந்து ஆதாரங்களை சேரித்துக்கொண்டு, அதன் அடிப்படையில், தன்னுடைய விமர்சனத்தை மக்களின் முன்பு கொண்டுவருவார். இப்படிப்பட்ட ஆய்வு செய்து, பல நூல்களின் மேற்கோள்களோடு ஒரு புத்தகம் எழுதப்பட்டால், அவரை சிறந்த ஆய்வாளர் என்று உலகம் போற்றும். இது தான் படித்தவர்கள், ஆய்வாளர்கள் பொதுவாக‌ செய்யும் அடிப்படையான செயல். 

திரு செண்பகப்பெருமாள் தன் ஆய்விற்காக எத்தனை நூல்களை பயன்படுத்தியுள்ளார், மேற்கோள் காட்டியுள்ளார்?

தற்போது உலகத்தின் அதிக ஜனத்தொகைக் கொண்ட மதமாக திகழும் கிறிஸ்தவத்தின் புனித நூலை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அவர் வெறுமனே விமர்சிப்பாரா?  பைபிளின் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் அவர் விமர்சிப்பதினால், எபிரேய மற்றும் கிரேக்க மொழி அகராதிகளையும், சரித்திரங்களையும அவர் படித்து தன் விமர்சனத்தை முன்வைத்து இருப்பார் என்று நாம் நம்பலாம். அவர் பல பைபிள் விளக்கவுரைகளை படித்து இருந்திருக்கவேண்டும்? அப்போது தான் பைபிள் மீது ஒரு சிறந்த விமர்சனத்தை முன்வைக்கமுடியும்! மேலும் கிறிஸ்தவத்திற்கு வெளியே மதசார்ப்பற்ற நூலாசிரியர்கள், சரித்திர நூல்கள், பைபிளின் அகழ்வாராச்சி நூல்கள் என்றுச் சொல்லி, பல நூல்களை படித்து ஒருவர் விமர்சனம் செய்வாரானால், அடேங்கப்பா! எவ்வளவு வரவேற்பு கிடைக்கும்! எப்படிப்பட்ட மேன்மை அவருக்கு கிட்டும் தெரியுமா? அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு ஆய்வாளர் தன் கருத்தைச் சொல்லும் போது, இன்னொரு ஆய்வாளர் அவரின் கருத்துகளை விமர்சித்து, மேலதிக விவரங்களோடு பதில்களைத தருவார். இது பொதுவாக நடப்பது தான்.

மேற்கண்ட எதிர்ப்பார்ப்புக்கள் ஒரு ஆய்வு புத்தகத்திற்கு தேவை என்பதை நான் அறிந்திருக்கின்றபடியினால், திரு செண்பகப்பெருமாள் அவர்களின் நூலை வாங்கியவுடன், அதன் முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை ஒரு ஸ்கேன் செய்துப்பார்த்தேன். எனக்கு தெரிந்த ஆய்வு நூல்களின் பெயர்களோ அல்லது  ஆசிரியர்களின் பெயர்களோ தென்படுமா என்று தேடிப்பார்த்தேன். அதாவது, இந்த ஆசிரியர் எந்தெந்த நூல்களை தன்னுடைய ஆய்விற்காக பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய "நூற்பட்டியல் அல்லது பிப்லியோகிராபியை(Bibliography)" தேடிப்பார்த்தேன். ஆனால், அப்படிப்பட்ட ஒன்று உண்டு என்று இந்த ஆசிரியருக்கு  தெரிந்திருக்கவில்லை என்பதை அறிந்துக் கொண்டேன்! உடனே எனக்கு புரிந்துவிட்டது, அதாவது திரு செண்பகப்பெருமாள் என்பவர் ஒரு அரைகுறை ஆள், தான் சாப்பிட்டத்தில் ஜீரணமாகாதவைகளை இந்த புத்தகத்தில் வாந்தி எடுத்திருப்பார் என்பதை மட்டும் உணர்ந்துக் கொண்டேன், எனவே இவருடைய புத்தகம் படிப்பதற்கு தகுதியற்றது என்பதை உணர்ந்தேன்.

ஆனாலும், அவர் தன் அரைகுறை ஆய்வை ஒரு புத்தகமாக வெளியிட்டுவிட்டதால், அதனை படிக்கும் வாசகர்கள் இடறுவார்களே என்பதால், அவருக்கு அவரின் அறியாமையையும், மடமையையும் புரியவைக்கவேண்டும் என்பதற்காக, அவருக்கு பதிலை கொடுக்க தொடங்கினேன். (அறியாமை & மடமை - இவ்விரு வார்த்தைகளுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது).

பிப்லியொகிராபி என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும், இருந்தபோதிலும், ஆங்கிலத்தில் சில வரிகளை கிழேதருகிறேன்.

What's a Bibliography? (Source)

A bibliography is a list of all of the sources you have used (whether referenced or not) in the process of researching your work. In general, a bibliography should include:

  • the authors' names
  • the titles of the works
  • the names and locations of the companies that published your copies of the sources
  • the dates your copies were published
  • the page numbers of your sources (if they are part of multi-source volumes)

சரி, போகட்டும், திரு செண்பகப்பெருமாள் அவர்கள் பிப்லியோகிராபியை கொடுக்கவில்லை, குறைந்தபட்சம் புத்தகத்தில் ஆங்காங்கே பல மேற்கோள்களையும், எபிரேய கிரேக்க வார்த்தைகளையும், பல ஆங்கில மற்றும் தமிழ் விளக்கவுரைகளையும் படித்து மேற்கோள்கள் காட்டியிருப்பார் என்ற ஆசையால், புத்தகம் முழுவதையும் படித்து முடித்தேன். அவர் என்னை ஆச்சரியப்படுத்தினாரா? இல்லையா? தொடர்ந்து படியுங்கள்.

இப்போது, அவர் மேற்கோள் காட்டிய புத்தகங்களின் பட்டியலை, சரசரவென்று பட்டியலிடப்போகிறேன். அவைகள் எத்தனை பக்கங்கள் நீண்டுக்கொண்டுச் செல்லுமோ! அதனை நீங்களே பாருங்கள்! 

திரு செண்பகப்பெருமாள் அவர்கள் தன் ஆய்விற்காக பயன்படுத்திய இதர நூல்கள்:

  1. The Story of Faith by William Alva Gifford (Amazon link)
  2. Harper’s Bible Dictionary (Amazon link)
  3. “விவிலியத்தில் புனித பவுலின் திருமுகங்கள்”, ஆசிரியர் தியாகு
  4. “கிறிஸ்தவம் நடந்து வந்த பாதை”, ஆசிரியர் டாக்டர் ஐவி பீட்டர்
  5. “வழி, வாய்மை, வாழ்வு - யோவானின் நற்செய்தி நூல் விளக்கம்”, ஆசிரியர் ஞான  ராபின்சன்

மேற்கண்ட ஐந்து நூல்களிலிருந்து தான் அவர் சில  மேற்கோள்களைக் காட்டியுள்ளார். அதிகபட்சமாக 11 அல்லது 12 மேற்கோள்களைக் காட்டியுள்ளார். (இப்புத்தகங்களை வாங்க விரும்புபவர்களுக்கு பயன்படும் என்பதற்காக, அமேஜான் தொடுப்பை நான் மேலே கொடுத்துள்ளேன், தமிழ் புத்தகங்களுக்கு தொடுப்பு கிடைக்கவில்லை).

மேற்கோள் காட்டியது ஒன்று, அதனை விளக்கியது இன்னொன்று:

முக்கியமாக, மேற்கண்ட நூல்களில் "The Story of Faith" என்ற நூலிலிருந்து ஒரு மேற்கோளை காட்டிவிட்டு, அதன் ஆசிரியர் என்ன சொன்னாரோ அதற்கு எதிர்மாறாக விளக்கமளித்துள்ளார் நம் மேதாவி திரு செண்பகப்பெருமாள் அவர்கள். அதன் ஆசிரியர் (William Alva Gifford) "தான் ஆதரித்து எழுதிய வரிகளை" இவர் மேற்கோள் காட்டிவிட்டு, அவ்வரிகள் சொல்வதற்கு எதிராக விளக்கமளித்துள்ளார். ஒரு பத்தியை கூட‌ ஆங்கிலத்தில் படித்து புரிந்துக்கொள்ளாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று இவர் நினைத்துவிட்டாரோ என்னவோ? என்ன ஒரு நயவஞ்சக‌ம்! 

ஒருவேளை திரு செண்பகப்பெருமாள் அவர்களுக்கு, ஆங்கிலம் கூட சரியாக படித்து புரிந்துக்கொள்ள தெரியவில்லையோ! என்ற சந்தேகம் தான் வந்தது. இந்த தொடர் கட்டுரைகளில் இவரின் ஒவ்வொரு வரியும் நெருப்பில் போட்டு புடமிடப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நெருப்பின் சோதனைக்கு இவரின் வரிகள் தாக்குபிடிக்குமா? அல்லது சாம்பலாகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும் வாசகர்கள்.

அடுத்ததாக, “Harper’s Bible Dictionary” என்ற‌ நூலை சில வார்த்தைகளின் பொருளை மேற்கோள் காட்ட பயன்படுத்தியுள்ளார். தேவையான இடங்களில் இவைகளை காண்போம். இந்த அகராதி அவரது ஆய்விற்கு அதிகமாக உதவவில்லை என்பது என் கருத்து. தேவையான இடங்களில் அதன் மேற்கோள்களைக் காண்போம்.

பைபிள் சம்மந்தப்பட்ட இதர‌ ஆய்வு நூல்களை, எபிரேய, கிரேக்க அகராதிகளை, இன்ன பிற சரித்திர நூல்களை இவர் பயன்படுத்தவே இல்லை. இப்படிப்பட்ட நூல்களை பயன்படுத்தினால், தன்னுடைய வெறுப்பை காட்டமுடியாமல் போகும் என்பதாலோ, அல்லது இவ்வித‌ புத்தகங்களை படித்து புரிந்துக்கொள்ளக்கூடிய ஞானம் தனக்கு இல்லை என்பதாலோ தெரியவில்லை, அவர் அந்த பக்கமே தலைவைத்து “படுக்கவில்லை”, சாரி “படிக்கவில்லை”.

நீ எந்தெந்த நூல்களை பயன்படுத்தப்போகிறாய்?

இவரது இப்புத்தகத்திற்கு பதில்  சொல்லும் நீ எந்தெந்த ஆய்வு நூல்களை பயன்படுத்தப்போகிறாய்? என்று சிலர் என்னிடம் கேட்கலாம்.

1) New International Bible Commentary Hardcover - F.F. Bruce

என்னிடத்தில் F.F. Bruce அவர்களின் பைபிள் விளக்கவுரை புத்தகம் உள்ளது, இதனை நான் அடிக்கடி என் கட்டுரைகளை எழுதுவதற்கு பயன்படுத்துகிறேன் (Amazon Link)

2) தமிழில் தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் உள்ளது (Link)

3) எபிரேய கிரேக்க பைபிள் மூல மொழி வேதாகமம்: இணையத்தில் எபிரேய, கிரேக்க மொழியில் வேதம் கிடைக்கிறது, அவைகளை தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன். ஒவ்வொரு எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் எங்கெங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுலபமாக தேடி கண்டுபிடிக்கலாம். அவைகளின் அர்த்தங்களையும், இலக்கண விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் (Link1, Link2, Link3 ...).

4) யூத சரித்திரத்தை எழுதிய கி.பி. முதல் நூற்றாண்டு சரித்திர ஆசிரியர் ஜோசபஸ் என்பவரின் அனைத்து நூல்களையும் தேவைப்ப‌படும் போது நான் பயன்படுத்துகிறேன்(Flavius Josephus)

5) சவக்கடல் பற்றிய ஆய்வு நூல்கள்

6) பைபிள் கல்லூரிகளில் எபிரேய மற்றும் கிரேக்க மொழி பேராசிரியர்களோடு தொடர்பு கொண்டு, சில  கேள்விகள் பற்றி ஆலோசனை பெறவும் எனக்கு என் நண்பர்கள் மூலம் வாய்ப்புக்கள் உள்ளது.

7) புதிய மற்றும் பழைய  ஏற்பாட்டின் கையெழுத்துப் பிரதிகளின் புகைப்படங்களை, சில வேளைகளில் இணையத்தின் உதவி கொண்டு ஆய்வுக்காக பயன்படுத்தமுடியும்.

8) பைபிள் ஆங்கில விளக்கவுரைகள் என்று வந்தால், இணையத்தில் பல சிறந்த விளக்கவுரைகள் கிடைக்கின்றன, அவைகளை பயன்படுத்துவேன் (https://www.biblestudytools.com/commentaries/)

9)  யூதர்கள் பழைய ஏற்பாட்டிற்காக எழுதிய  விளக்கவுரைகளையும், சரித்திர விளக்கவுரைகளையும் பயன்படுத்திக்கொள்வேன் (Chabad Link & this Link)

10) இன்னும் அனேக நூல்கள் என் தனிப்பட்ட தொகுப்பில் என் வீட்டில் உள்ளன

இப்படி பல நூல்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இணைய காலத்தில் ஆய்வு செய்ய விருப்பமும், நேரமும் இருக்கவேண்டுமே தவிர, வீட்டில் உட்கார்ந்துக்கொண்டே, உலகின் பல  சிறந்த நூலகங்களில் கிடைக்கும் பல அறிய  ஆய்வு நூல்களை  படித்து புரிந்துக்கொள்ளலாம். ஆக, ஆய்வு புத்தகம் எழுதுகிறேன் என்றுச் சொல்லி, பைபிள் மீது விமர்சனம் வைக்கிறேன் என்றுச்  சொல்லி, அரைகுறையாக யாராவது எழுதினால், அவர்களுக்கு பதில்களை எழுதுவது தற்காலத்தில் மிகவும் சுலபம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பெருமைக்காக அல்ல, உண்மையைச் சொல்கிறேன், ஆய்வு என்று வந்துவிட்டால், கிறிஸ்தவர்களும், யூதர்களும் கொஞ்சம் அதிகமாகவே ஆழமாக இறங்கிவிடுகிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து. ஆகையால், பைபிளை விமர்சிக்கும் போது,  100 முறை அல்ல, 1000 முறை மறுபரிசீலனைச் செய்வது நல்லது. 

சரி, இப்போது நாம் முடிவுரைக்குச் செல்வோம்.

முடிவுரை:

இவ்வளவு கேவலமாக ஆய்வு செய்த இவருக்கு ஏன் பதில் அளிக்க‌வேண்டும்? இவரையும் இவரது புத்தகத்தையும் புறக்கணிக்கவேண்டியது தானே! ஏன் இதற்காக உன் நேரத்தை செலவழிக்கவேண்டும் என்ற கேள்விகள் வாசகர்களுக்கு எழலாம்! ஆனால், இவர் எழுதியவைகளில் எத்தனை தவறுகள் உள்ளன? எத்தனை நியாயமில்லாத குற்றச்சாட்டுக்கள் உள்ளன? எத்தனை தவறான புரிதல்கள் உள்ளன? என்று எத்தனை பேருக்குத் தெரியும்!

இப்படிபட்ட அரைகுறை ஆய்வுகளுக்கு நாம் பதில்  சொல்லவில்லையானால், எதிர்காலத்தில் இவரைப்போன்று அனேக அரைவேக்காடுகள்  ஆன்மீக‌ வியாபாரிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, அறியாமையில் இருக்கும் மக்களை ஏமாற்றுவார்க‌ள் குழப்புவார்க‌ள் என்பதால், இப்படிப்பட்ட பதில்கள் தரப்படவேண்டும், சின்ன சின்ன குற்றச்சாட்டுகளுக்கும் பதில்கள் சொல்லப்படவேண்டும். பைபிளின் சத்தியத்தையும், புனிதத்தையும் உலகிற்கு சொல்ல வேண்டியது நம் கடமையாக இருக்கிறது.

திரு செண்பகப்பெருமாள் அவர்களின் முகவுரையை இன்னும் ஆழமாக தோண்டுவோம்...


"செண்பகப்பெருமாளின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்" - தொடர் பதில்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்